October 2024


 "கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்; அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்" - தலைவர் ரிஷாட்!

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று (06) மன்னார், மாந்தை பிரசேத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிண்ணியாவைச் சேர்ந்த கட்சியின் தவிசாளர் ஒருவர் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் இவ்வாறு பலர் உங்களது கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? எனவும் மற்றும் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவத? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தலைவர் ரிஷாட் தெரிவித்ததாவது,
"தவறு செய்தமைக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வௌியேறியதாகக் கூறித்திரிகின்றனர். தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு தவறு செய்த மூன்று எம்.பி.க்களை எமது கட்சி நீக்கியுள்ளது.
இதுபோலவே, கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவரையும் நாம் நீக்கியுள்ளோம். இன்று அவர் ரணிலுடன் இணைந்துள்ளார். மட்டுமல்ல கட்சியிலிருந்து அவர்தான், வௌியேறியதாக ஊடகங்களுக்கு கூறுகிறார். மக்கள் ஆணையை மீறியவர்களுக்கு மக்களே பாடம்புகட்டுவர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடும். சில மாவட்டங்களில் தனித்தும் இன்னும் சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடும். எம்மால் நீக்கப்பட்டவர்களைச் சேர்த்து உருவாக்கப்படும் கூட்டணியில் நாம் சேரமாட்டோம்.
இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்கள் உள்ள கூட்டணியிலும் எமது கட்சி இணையாது. அம்பாறை மாவட்டத்தில், இவ்விடயம்தான் இழுபறியில் உள்ளது. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள அணியில், நாம் இணையப்போவதில்லை. இவர்களைச் சேர்த்தால் அம்பாறையில் தனித்தே மயில் சின்னத்தில் போட்டியிடுவோம். புத்தளம் மாவட்டத்திலும் இந்த நியதியே பின்பற்றப்படும். இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் தோற்றியிருந்தனர்.




தேசிய ஜனநாயக முன்னணியின் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா சமாஜ்வாதி கட்சியின் மஹிந்த தேவகே, சுயேச்சை வேட்பாளர் பிரேமசிறிமானகே மற்றும் கே ஆனந்த குலரத்ன ஆகியோர் தமது செலவு அறிக்கைகளை வழங்கிய நான்கு வேட்பாளர்களில் அடங்குவர்.




தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, அவற்றைச் சமர்ப்பிக்க வரும் 13ஆம் திகதி கடைசி நாள் என்றும், அதன்பின் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளுக்கு சட்டவிரோதக் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.